#1160 to #1164

#1160. சக்தி மன மகிழ்ச்சி தருவாள்

பேச்சுஅற்ற நற்பொருள், காணும் பெருந்தகை,
மாச்சு அற்ற சோதி, மனோன்மணி மங்கையாம்
காச்சு அற்ற சோதிக் கடவுளுடன் புணர்ந்து,
ஆச்செற்றுஎ னுள் புகுந்து ஆலிக்கும் தானே.

சொற்களைக் கடந்த நற்பொருள்; காண்பதற்கரிய பெருந்தகை; மாசற்ற சோதி; மனோன்மணியாகிய மங்கை; சினம் இல்லாத சோதிக் கடவுடன் கூடி என்னுள்ளம் புகுந்தாள். எனக்கு மன மகிழ்ச்சியைத் தந்தாள்.

#1161. சிவசக்தியர் ஐந்தொழில் புரிவர்

ஆலிக்கும் கன்னி யரிவை மனோன்மணி
பாலித் துலகிற் பரந்து பெண்ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித் தொருவன் உகந்து நின்றானே.

வாலையாக மூலாதாரத்தில் இருந்து கொண்டு சீவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாள் சக்தி.
சிவத்தினிடமிருந்து வேறாக இருந்து கொண்டு உலகினை விளக்குவாள் பார்வதி தேவி.
உலகில் எல்லா உயிர்களையும் காத்துப் பரந்த பெண் வடிவம் ஆவாள் மனோன்மணி.
ஐந்தொழிகளின் தலைவி, வேதத்தின் முதல்வியாகிய அவளுக்கு மகிழ்வூட்ட சிவன் விரும்பி நின்றான்.

#1162. சிவசக்தியர் உயிர்களைக் காப்பர்

உகந்துநின் றானம்பி யொண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றாநம் முழைபுக நோக்கி
உகந்துநின் றானிவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றானவ டன்றோ டொகுத்தே.

சிவபெருமான் நெற்றிக் கண்ணுடன் மகிழ்ச்சியாக நின்றான். அவன் சீவர்களிடம் எழுந்தருள விழைந்தான். அதனால் சிவன் எல்லா உலகங்களையும் விரும்பி நின்றான். போகியாகிச் சக்தி தேவியின் தோளைத் தழுவியபடி நின்றான்.

#1163. பேரின்பம் சொல்ல இயலாதது

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரித்த சுணங்கின் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே.

பெருத்த முலைகளை உடையவள்; மென்மையான இடையை உடையவள்; புள்ளிகள் பரவிய தேமலை உடையவள்; தூய மொழி பேசுபவள்; மயில் தோகை போன்ற மெல்லிய அடிகளை உடையவள். இத்தகைய சக்தியை அடைந்ததால் விளைந்த இன்பத்தை எடுத்துக் கூற இயலாது.

#1164. மல்லவொண்ணாத மனோன்மணி

சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மணி தானே.

தீ மண்டலம் விளங்கும் காமபீடத்தின் வலிமையை வெறும் வாய் வார்த்தைகளால் உரைக்க இயலாது.
செல்ல இயலாமலும், அளந்து அறிய இயலாமலும், மக்கள் திகைத்து அங்கேயே இருப்பார்கள்.
வினைப் பயன்களை வெல்ல அரிதாகும்படிச் செய்கின்றாள் ஒப்பில்லாத தலைவியாகிய சக்தி.
ஆற்றல் மிகுந்த மனோன்மணியைச் செயலாற்றாத வண்ணம் பந்தித்து நிறுத்தவும் இயலாது.